Thursday, 14 July 2016

                         மேன்மக்கள் மேன்மக்களே

             
                      மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசின் நிதியுதவி பெரும் சில அமைப்புகளின் வரவு , செலவு கணக்குகளை சரிபார்க்கும் அரசின் ஒரு அங்கம் தான் தணிக்கை துறை. அதாவது CAG ( comptroller and auditor of general ) கிட்டத்தட்ட 58000 ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர். காமன்வெல்த், 2 ஜி , நிலக்கரி சுரங்க ஏன் நம் தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட தலைமைச்செயலகம் ஊழல் வரை நாட்டிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது இத்துறைதான்.   
 
                  இத்துறையின் தலைமை அதிகாரியாய் இருக்கும் சசிகாந்த் சர்மா குறிப்பிட்டதை மேற்கோள்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சீதாராம் யெச்சூரி கடந்த வாரம் நமது அகில உலக புகழ் பாரத பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.  அதில் சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை பட்டியலிட்டார்.
  •  அதானி குழுமம் - 96031 கோடி 
  •  எஸ்ஸார் குழுமம் -1.01 ட்ரில்லியன்
  •  ஜி.எம்.ஆர் -47,976 கோடி 
  •  ஜி.வி.கே  - 33,933 கோடி 
  •  ஜே.பி குழுமம் - 75,163 கோடி
  •  ஜே.எஸ்.டபிள்யூ - 58,171 கோடி
  •  லான்கோ குழுமம் - 47,102 கோடி 
  •  ரிலைன்ஸ் குழுமம் - 1.25 ட்ரில்லியன் 
  •  வேதாந்த குழுமம் - 1.03 ட்ரில்லியன்
  •  விடியோகான் - 45,405 கோடி 
 நம் நாட்டில் விவசாயிகளின் பயிற்கடனாக வழங்கப்பட்ட கடனும், அதானி என்ற தனி ஒருவனுக்கு வழங்கப்பட கடனும் ஒன்றுதான் என ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேச்சு எழுந்தது,  அந்த பேச்சு பேச்சாகவே போனது. நம் நாட்டில் ஆண்டவனை பற்றிகோட எதிர்க்கருத்து வைக்கலாம், ஆனாலும் அதானி போன்றோரை பற்றி எந்த கருத்தும் வைத்த விடமுடியாது. ஆக மொத்தம் மேற்குறிப்பிட்ட சில நிறுவங்கள் மட்டும் 7 லட்சம் கோடியை கடனாக பெற்றுள்ளது.  இதில் 5 லட்சம் கோடியை வங்கிகள் வாராக்கடன் பட்டியலில் இணைத்துவிட்டது. அதாவது காந்தி கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது.  இந்த பணம் அனைத்தும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது அதை திரும்பப்பெறுதல் என்பது சாத்தியமில்லை என CAG தலைமை அதிகாரி கூறியிருக்கிறார்.

           இதுபோன்ற தரகு முதலாளிகளுக்காகத்தான்  ஆண்டு தோறும் பட்ஜெட்டோ என எண்ணும் வகையில் கடந்த பட்ஜட்டில் மட்டும் வருமான வரி, சுங்க வரி, காலால் வரி என்ற வகையில் மொத்தம் 5,48,451 கோடி ரூபாய் வரிச்சலுகை என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் விவசாயம் மற்றும் விவசாய நலனுக்காக 35,984 கோடி மட்டும் ஒதுக்கிவிட்டு நாங்கள் ஏழை, எளியவர்களுக்கான ஆட்சி என்று நம்மையே முட்டாளாக்குவர்.

  பங்குச்சந்தையின் குறியீட்டுக்குள் அடைக்கப்பட்ட நமது பொருளாதாரம் தற்போது வலுவாக இருக்கிறது என சொல்லிக்கொண்டு, தன்னை காட்டிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, மனித வளம் குறைந்த, ஏழை நாடுகளான மொசாம்பிக் போன்ற ஆப்ரிக்கா நாடுகளிடம் பருப்புக்காக பிச்சையெடுக்கிறோம்.  என்ன செய்வது பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், என் நாட்டு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைக்கு கொடுப்பதில்லை. தனியார் மயம் , தாராள மயம் என திணிக்கப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 3.2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இன்னொருபுறம் இந்தியாவில் 111 பெரும் பணக்காரர்களின் சொத்துமதிப்பு வருடத்திற்கு 25% அதிகரிக்கிறதாம்.

                          "செத்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே 
                            பட்டாலும் எம்மக்கள் எம்மக்களே "

மறப்பது நமது குணம், அதுவே அவர்களின் மூலதனம்.