Wednesday, 12 April 2017

 கேட்டது நிவாரணம் கிடைத்தது நிர்வாணம் 

 



நிவாரணம் கேட்டு நிதானம் காத்து நித்தமும் குலைந்து நித்திரை தொலைத்தோம் வறண்டுபோன பூமியில் வாழ்வாதாரம் போச்சு வாழ்வளித்த நிலமெல்லாம் வட்டிக்காரனுக்கு சொந்தமாச்சு விளைந்தபொருளெல்லாம் விலையேற்றமின்றி விலைநிலமெல்லாம் வியாபாரமா போச்சு விவசாயி வீழ்ந்தாலும் விவசாயம் வீழலாமா ? விவசாயக்கடன் தள்ளுபடி விரயமென சொல்லலாமா ! மாநிலத்திடம் மன்றாடியும் மத்தியத்திடம் மானமிழந்தும் மதிப்பில்லையே இனி என்ன செய்ய?







                                  விவசாயின் அவலம் 




அகிலத்தில் மூத்தக்குடி டில்லியிலே
அரைநிர்வாணமாய் நிற்குது !!
அடிமைகளோ ஆர் கே நகர்ல
தெருத்தெருவுக்கு பொறுக்குது !!

ஏர் உழுத விவசாயில்லாம்
ஏழ்நிலையிலே இருக்கிறான்
எக்னாமிக்ஸ் உயருதுன்னு
ஏடெல்லாம் எழுதுறான் !!

மேக்இன் இந்தியாவில் மேல்தட்டு
நிறுவன கடனெல்லாம் தள்ளுபடி !!
மன் கி பாத்ல கூட மல்லையாவ
பற்றி பேசமாட்டாரு எங்க ஐயா மோடி !!

தினந்தோறும் 40 கோடி மக்கள்
இரவுணவு இல்லாமல் உறக்கம் !!
திங்க சோறு இல்லாட்டியும் நாடெங்கும்
டிஜிட்டல் இந்தியாவை பற்றி முழக்கம் !!

அணு ஆயுதங்களை வாங்கிக்குவித்து
அண்டைநாட்டை பயமுறுத்தி என்னபயன்?
அன்றாட சோத்துக்கு வழியில்லாமல்
வளர்ச்சிப்பற்றி கூவுவதால்தானே முரண்

விவசாயி மன்றாடி கேட்டும் மத்தியமும்
மாநிலமும் செவிச்சாய்க்கவில்லையே !!
விவசாயமெல்லாம் புளுத்து போனபின்பு
புதிய இந்தியா பிறந்து பயனில்லையே !!


அதானி என்ற தனியொருவனுக்கும், இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட கடன் ஒரே அளவுதான் ஏறத்தாழ 73000 கோடி..




Friday, 24 March 2017


                                             துப்பரவு  துயரம்  



                       விசவாயு தாக்கி மூன்று துப்புரவு தொழிலாளர்கள் மரணம் ...!!                                       





ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுநிற்கும் 
சமுதாயம் இருக்குமாயின் 
ஏவுகணையை விண்ணில் ஏவி 
இறுமாப்பு கொண்டென்ன பயன் ??

அறிவியல் யுகம் நடக்கும்போதும்  
அடிமை எண்ணம் மாறவில்லையே !!
அறிவியலறிஞர் பலபேர் இருந்தும் 
கழிவுகளை அகற்ற கருவியில்லையே !!

உச்சநீதிமன்றம் உரக்கச்சொல்லியும் 
ஆளும்வர்க்கத்திற்கு உரைக்கவில்லையே !!
மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளும் 
வழக்கம் இன்னும் ஒழியவில்லையே !!

பெரியார் அம்பேத்கர் பிறந்த இந்நாட்டில் 
இன்னமும் இப்படியொரு இழிநிலை  !!
என்று மாறுமோ இவர்களின் நிலை ??

Wednesday, 8 March 2017

                              மகளிர் தின வாழ்த்து 


   இந்தியா 104 செயற்கைக்கோளை ஒரே ராக்கெட்டில் ஏவியதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என டொனால்ட் டிரம்பின் உளவுத்துறை தலைவர் டான் கோட்ஸ் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்து, இந்தியா நம்மை காட்டிலும் விண்வெளித்துறையில் முன்னேற்றம் கொண்டுள்ளதை நாம் மறுக்கமுடியாது என கூறும் அளவுக்கு இன்று நம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.  ஆனால் நாம் சமுதாயத்தில் பல்வேறு கட்டமைப்புகளை கொண்டுள்ளோம் அதில்  பெண்களுக்கென ஒரு விதி ஆண்களுக்கான ஒரு விதி என எழுதப்படாத ஒரு வரையறையை கொண்டுள்ளோம்.

     அவ்விதியை தகர்த்தெறிந்ததில் பெரியார் மற்றும் அண்ணாவின் கருத்துக்கள் மிக முக்கியமானவை. விதவை மறுமணம், பெண்களுக்கு சொத்துரிமை, பெண் சுதந்திரம், பெண்கல்வி  போன்ற  பல்வேறு சமுதாய புரட்சியின் விளைவு  இன்று குறிப்பாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு வழங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. 

 குடியரசு தலைவராக பிரதீபா பாட்டிலும், பிரதமராக இந்திராகாந்தியும் அமர்ந்து  அந்நாற்காலி தன்னை அலங்கரித்து கொண்டது. சமீபகாலமா ஆண் பெண் என்ற வேறுபாடின்றி சமுதாயம் ஒரே நேர்கோட்டில் பயணிக்க தொடங்கியிருக்கிறது என்றால்  உலகமயமாதலும் , பெண்களின் கல்வியறிவும் ஒரு காரணம். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனைகள் அளிக்கப் பட  வேண்டும் இன்னும் நாம் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டிட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை.

  நடிகை பாவனாவுக்கு பாவாடை கிழிந்ததால் பாராளுமன்றம் வரைக்கும் எதிரொலிக்கும் அதே குரல் நந்தினி போன்ற பாமர பெண்ணிற்கும் ஒலிக்கவேண்டும். பெண்ணை ஒரு காம பொருளாய் மட்டும் பார்க்கும் சில குரூர எண்ணம் நம்மிடத்தில் ஒழிய வேண்டும். அவளுக்கான உரிமையை நாம் வழங்கிட வேண்டும். அவ்வப்போது அவள் உடலால் உணருகிற வலியை ஆண்கள் அறிந்திருக்க வேண்டும்.  ஆண் , பெண் என்ற வேற்றுமை இல்லாமல் இருத்திடல் வேண்டும். தாய், சகோதரி, தோழி என பல்வேறு உறவுகளில் நம்மை சுற்றி பிணைந்துள்ள பெண்ணை போற்றி பாதுகாத்திட  வேண்டும். 

"மனைவி  கணவனை அடிப்பதில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது என சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியானதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் "  

Monday, 6 February 2017

           எளிமையும் எதார்த்தமும் 




      டிசம்பர் 5 , தான்  முதலமைச்சராக பதிவியேற்ற பிறகு  எழுந்த மிகப்பெரிய சவாலான பிரச்னையாக ஜல்லிக்கட்டு இருந்தது. இத்தனை வருடமாக ஜெயலலிதாவால் சாதிக்க முடியாததை ஒரு சில நாட்களிலியே செய்து காட்டினார் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மதிப்பிற்குரிய பன்னிர்செல்வம் அவர்கள். இதற்கு இளைஞர்களின் தன்னெழுச்சி முக்கிய காரணம் என்று நாம் சொன்னாலும் இதற்கு முன்னாள் இருந்த முதல்வர், சட்டம் உட்பட எல்லா பிரிவுகளிலும் ஆற்றல் உடைய  புரட்சியின் தலைவி என நாம் சிலாகித்துக்கொள்ளும் ஜெயலலிதா இந்த புரட்சியை நடத்த அனுமதித்திருப்பாரா என்றால் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஜல்லிக்கட்டுக்கு இது போன்ற ஒரு வலுவான சட்டத்தை கொண்டு வந்துருப்பாரா என்றால் நம்மில் பலபேர் சற்றே சிந்திக்கதான் செய்வோம் அதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளே சான்று.

      ஓ பி எஸ்தன்னால் சுதந்திரமாக ஒரு முடிவை எடுக்க முடியாத ஒரு சூழ்நிலையிலும்கூட இக்குறுகிய காலகட்டத்திற்குள் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தன் ஆளுமையை முடிந்த அளவுக்கு சிறப்பாக வெளிப்படுத்தினார் என்றால் மறுக்கமுடியாது. பல்வேறு பொது நிகழ்ச்சியில் மக்களோடு மக்களாக ஒரு முதல்வர் என்ற மிதப்பில் இல்லாமல் தனக்கே உரித்தான தோற்றத்திலும் செயலலிலும் காணப்பட்டார். மக்களுக்கும் முதல்வருக்குமான ஒரு இடைவெளி மிகவும் குறைந்தே இருந்தது. ஜல்லிக்கட்டிற்காக ஒரு நிரந்திர தீர்வை கொண்டுவந்து மக்களின் பார்வையில் இருந்த ஓ பி எஸ் ன் பிம்பத்தை மாற்றி காட்டவும் செய்தார்.  சென்னையில் குடிதண்ணீர் பற்றாக்குறைக்காக  ஆந்திரா சென்று தண்ணீர் பெற்று தரவும் செய்தார்.  கிராமபுறத்து மாணவர்களின் நலனுக்காக மருத்துவ படிப்பிற்கான  நீட் தேர்வை தமிழ்நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கக்கூடிய வகையில் ஒரு சட்ட மசோதாவையும் கொண்டுவந்து சட்ட மன்றத்தில் நிறைவேற்றவும் செய்தார். இவ்வளவும் ஒரு அதிகார வெறிபுடித்த புலியின் கூட்டுக்குள் இருந்த பூனையாக செய்து காட்டினார்.

      பத்திரிகையாளர் ஒருமுறை தங்களை சுதந்திரமாக நடக்க ஏதோ ஒரு சக்தி தடுக்கிறதே என்ற கேள்விக்கு , அந்த சக்தி எது என்று உங்களுக்கே தெரியும் என்று மறைமுகமாக தன் நிலைமையை கூட வெளிப்படுத்தினார். தற்போது தனது சொந்த காரணத்திற்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது நமக்கு பெரிய விசயமாக இருந்தாலும், அவருக்கு தன் பதவி நிரந்திரமில்லை என்பது அவரே அறிந்ததுதான். ஏதோ பல வருடங்களுக்கு பிறகு ஒரு எளிமையான முதல்வரை காணமுடிந்தது.  

  என்னதான் சட்டத்தில் இதற்கு இடம் இருந்தாலும் ஒரு வார்டு கவுன்சிலராக கூட மக்களிடம் வாக்கு பெற்றிடாத , மக்களுக்கு அறிந்த முகமும்கூட இல்லாத சசிகலா, முதல்வரின் தோழியென்ற ஒரு காரணத்தினால் மட்டும் அனைத்து தமிழ் மக்களையும் முட்டாளாக்கி முதல்வராக பதவியேற்க உள்ளார்.  பதவி ஏற்றாலும் அடுத்த ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் இந்த தமிழ்மக்களிடம் வாக்கு வாங்கி வெற்றி பெற்றே ஆக வேண்டும். இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்ற எழுதபடாத ஒரு விதி  நம் ஊரில் உள்ளது.  காத்திருப்போம் விதியை வெல்வார்களா தமிழர்கள்  என்று ???


       " அரசியலெல்லாம் அருவறுப்படி 
         அறமெல்லாம் அங்கே இல்லையடி 
         தமிழ்நாட்டுஆட்சியெல்லாம் போலியடி 
         தமிழனுக்கெல்லாம் தலைகுனிவடி 
         தரம்கெடஆரம்பிக்கிறதோ தமிழ்குடி"  




Thursday, 5 January 2017

          விவசாயின் குரல் 



தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூரைய்யா 
மாதத்திற்குள் மடிந்து போனோம் நூறு பேரய்யா 
சாதி மத பேதமின்றி சோறு போட்டோம்யா - சாவ 
நாடும் எங்கநிலைமையாத கொஞ்சம்பாருய்யா 

பிள்ளைகளுக்கு பால் வாங்ககூட காசில்லையே 
பால்காரனிடம் கடஞ்சொன்னேன் வழியுமில்லயே 
பத்துநாளா மூத்தவன்  கல்லூரிக்கு  போலயே 
கட்டணம்செலுத்தத்தான் கையிலு ஒண்ணுமில்லயே 

என் இளைய பிள்ளை படிக்கிற பால்வயசுல 
நிலமை அறிஞ்சு கூலி வேலைக்கு போகுதே  
என்வீட்டு கண்ணாடி என்பொழப்ப பாத்து   
கைதட்டி ஏளனமாய் சிரிக்குதே சிரிக்குதே !!

என் வீட்டு காளை கூட கண்ணீர் சிந்துதே 
நான்படும் பாட்டதா அதுவும் பாக்குதே 
அடேய் ! என்ன வித்தாவது உன்குடும்பத்த  
பாத்துக்கோ என சொல்லாம சொல்லுதே 

நாளசோத்துக்கு நாலாப்புறம் தேடி ஓடுறேன் 
நாளைக்காவது என் புள்ளைகளுக்கு கறிகுழம்பு 
சோறுபோட முடியாதாயென  ஏங்கி சாகுறேன் 
காலையில கடன்காரனா கண்முழிக்கிறேன் 
இருந்தும்கூட காட்ட பாத்து கவல மறக்கிறேன்

இன்னைக்குகூட எந்நிலம  மாறாதாயென  
ஏக்கத்தோடு ஏறுப்பூட்ட புறப்பட்டுடேன் 
வேறதொழில் பாத்துகோடா தம்பின்னு 
புள்ளகிட்ட கண்டிச்சு சொல்லிப்புட்டேன்...