செவாலியே விருது
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமலகாசனுக்கு பிரான்சு அரசு செவாலியே விருது அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது. இவ்விருது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இவ்விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழகத்தில் கமல்தான் பெறுகிறார் என்று பரவலாக பேசப்பட்டு பேசப்பட்டு வருகிறது. பல்வேறு துறை சார்ந்தவர்களிடமிருந்தும், அரசியல் வாதிகளிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் சிவாஜி கணேசனுக்கு பிறகு கமல் தான் வாங்குகிறாரா என்றால் ஏற்றுக்கொள்ளமுடியாத செய்தியாகும்.
புதுச்சேரியை சேர்ந்த மதன கல்யாணி என்பவர் இதற்கு முன்னதாகவே 2002 ஆம் ஆண்டு இவ்விருதை பெற்றுள்ளார். இவர் புதுச்சேரி பிரான்சு கல்லூரியில் 41 ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். தமிழ் மொழியை தேர்வு செய்து படிக்கும் அயல்நாட்டவருக்கு தமிழ் மொழி, தமிழரின் கலாச்சாரம், பண்பாடு , பழக்கவழக்கங்களை கற்பித்து வந்துள்ளார். இவர் பிரான்சு மொழியில் முதுகலை பட்டமும், தமிழ் மொழியில் புலவர் பட்டமும் பெற்றவர். அதுமட்டுமல்லாது பல நூல்களையும் இயற்றியுள்ளார், சில தமிழ் நூல்கள் மற்றும் கலைகளை பற்றி பிரான்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளார். சிறந்த இலக்கியவாதியான இவருக்கு பிரான்சு அரசு தாமாகவே முன்வந்து செவாலியே விருதை விட உயர்ந்த விருதான ஒபிசியே என்ற விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது. இவ்விருதை பெற்ற முதல் இந்திய பெண்மணி மதன கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை சேர்ந்த alex என்பவர் 2010 ஆம் ஆண்டு செவாலியே விருதை பெற்றுள்ளார். இவர் கரகாட்டம் , சிலம்பம் , மயிலாட்டம் , மல்யுத்தம் மற்றும் மேஜிக் கலைகளிலும் கைதேர்ந்தவர் ஆவார்.மேலும் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
கலை , இலக்கியம், ஆழ்ந்த அரசியல் சிந்தனை, பகுத்தறிவு மற்றும் புதிய தொழில்நுட்பத்தை தமிழ் திரையுலகத்திற்க்கு அறியமுகப்படுத்திய கமல் என்ற கலைஞன் செவாலியே விருதுக்கு தகுதியானவர் தான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தில்லை. ஆனால் திரையுலகில் நடக்கின்ற விழாக்களோ , தேர்தலோ , விருதுகளோ ஏன் மிகைப்படுத்தப்பட்டு , மற்றவைகளெல்லாம் மழுங்கடிக்கப்படுகிறது.சட்டப்பேரவை தேர்தலின் முக்கியத்துவத்தை விட நடிகர் சங்க தேர்தலை நோக்கி மக்களின் எண்ணம் திரும்புகிறது, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான மக்களின் பார்வையை கபாலி படம் திசை திருப்புகிறது, இந்த அளவுக்கு தமிழ் மக்கள் நடிகர், நடிகைகளின் மீது ஆதித பாசம், அவர்கள் பேசும் வசனங்களின் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டமையால் என்னவோ , இன்று எம்மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஐந்து முதலமைச்சர்களை திரைதுறையிலிருந்து மட்டும் நாம் தேர்ந்தெடுத்துள்ளோம்.
தமிழகத்தில் காமராஜர் , கக்கன் , ஜீவானந்தம் என உன்னத அரசியலுக்கு உதாரணமாக இருந்த தலைவர்களின் வரிசையில் தான் இன்று குஷ்பூ , நக்மா , நமீதா போன்றோர்கள் வந்துள்ளார்கள் என்றால் தமிழர்களின் புதிய அரசியல் சிந்தனையும், பரந்துபட்ட புத்திசாலித்தனமும் தான் காரணம்.
" படித்த படிப்பெல்லாம் பரணியை சூழ
நடித்த நடிப்பெல்லாம் நாட்டை ஆள
விசுவாசமேற்று வீழ்ந்ததாம் காலில் சில
வந்து சேர்ந்ததாம் பதவிகள் பல....!!!!! "
- தமிழ்நாடு 



